திங்கள், பிப்ரவரி 15, 2021

சனிக்கிழமைசாமியாரும் வெளிநாட்டு லைசன்ஸும்

ஊரில இருந்து வெளிநாடு வந்த பொம்பிளைப்பிள்ளை ஒரு மாதத்தில “லைசன்ஸ”எடுத்தா...

மாப்பிள்ளை எந்தளவு குடிகாரன் எண்டு ஊரில இருக்கும் பொம்பிளை வீட்டுக்காரர் புரிஞ்சு கொள்ளவேணும். 😉

"என்ர மோள் வெளிநாடு போய் ஒரு மாதத்திலேயே கார் ஓடுறாள்" எண்டு
புளுகித்திரியப்படாது!!!!

( சிறிலங்கா லைசென்ஸ் எடுத்துக்கொண்டு வா எண்டு மாப்பிளை அரிகண்டம் செய்தார் எண்டா... மாப்பிள்ளை மரணக்குடி எண்டு அர்த்தம். கவனம்.lol)

#சனிக்கிழமைசாமியார்

🧔சனிக்கிழமைசாமியாரும் சாறியும்!!!

அவுஸ்திரேலியாவில் கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் சனிக்கிழமைகளில் ஒரே கொண்டாட்டம்தான். 

பொதுவாக ஒவ்வொரு சனியும் ஏதாவது ஒரு விசேசம் வரும். 

பிறந்தநாள் , கலியாணவீடு, சாமத்தியவீடு என்று தனியாக புறம்பாக அதுக்கெண்டு உழைக்கவேணும்.

நெருங்கின ஆக்கள் எண்டா 100$ . கொஞ்சம் தூரத்து சொந்தம் எண்டால் 50$ குடுத்தாத்தான் மரியாதை.

சனிக்கிழமைசாமியார் கடந்த 10 வருசமா குடுத்ததை கணக்குப்பாத்தால் எப்பிடியும் இலங்கை காசுக்கு 20 லச்சத்துக்கு கூடத்தான்.

சாமியார் வாங்கினது ரண்டுதரம் தான்.

குட்டிச்சாமியாரின் முதலாவது பிறந்தநாளை இந்தமுறை செய்யாமல் தவிர்த்துவிட்டோம்.

குட்டிச்சாமியார் பிறந்தது மேமாதம் எண்டதால அந்த மாதத்தில் பிறந்தநாளை செய்வதில்லை என்ற முடிவு எடுத்தாச்சு. காரணம் மேமாதம் எண்டது "வலி சுமந்த மாதம்"!

குட்டிச்சாமியார் வளந்து " ஏன் மேமாதத்தில் என்ர பிறந்தநாள் செய்யுறதில்லை" எண்டு கேள்வி கேட்டால் அவனுக்கு கனவிசயங்களை சொல்லவேணும்.

இந்தமுறை ஏப்ரலில் பிறந்தநாள் செய்வம் எண்டு நினைச்சு அடுக்கெடுத்தால் அதுவும் ஒரு சில காரணங்களால் பிழைச்சுப்போட்டுது.

பறுவாயில்லை அடுத்தமுறை ரண்டாவது பிறந்தநாளை ஊரில செய்வம் எண்ட பிளானில இருக்கிறார் சாமியார்.

குட்டிச்சாமியாரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் 1000 மரங்களை ஊரில் நடவேணும் எண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேரகாலம் கூடி வந்தால் வாற ஏப்ரலுக்கு ஊரில் குட்டிச்சாமியாரின் ரண்டாவது பிறந்தநாள் ஊரில செய்யும் போது 1000 மரங்கள் நடப்படும்.

குட்டிச்சாமியார் வளந்து பெரியாள் ஆகும் போது அவன் தன்ர கையால வருசாவருசம் ஒவ்வொரு ஊரிலும் 1000 மரங்களை நடுவான் எண்ட நம்பிக்கை சனிக்கிழமை சாமியாருக்கு இருக்கிறது.

இதற்கு குட்டிச்சாமியாரின் அம்மா (ஆதீனம்) முழுச்சம்மதம் குடுத்திருக்கிறா.ஏனெண்டால் அவாதானே நிதி அமைச்சர்.

உப்பிடித்தான் போன கிழமை ஒரு கலியாணவீடு.

முதல் நாள் இரவு சனிக்கிழமைசாமியார் பிக்பொஸ் பாத்துக்கொண்டிருந்தார்.

" இஞ்ச உந்த கோதாரியை பாக்குறதை விட்டுப்போட்டு என்ர சாறியை ஒருக்கா பிளீட்ஸ் பிடிச்சு அயின் பண்ணி வையுங்கோ" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் செரின் கட்டின சாறியை ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்த சாமியாருக்கு இது ஒரு தண்டனை.

மனிசிமாரின் சாறியை அயின் பண்ணாத புருசன்மார் உலகத்தில் இல்லை. சாமியாரும் விதிவிலக்கல்ல!

"எந்த சாறியை அயின் பண்ணுறது?" 

"நீலக்கலர் சாறி இருக்கு . அதை எடுத்து அயின் பண்ணுங்கோ"

சாமியார் ரண்டு சூட்கேஸுகளையும் கிண்டிக்கிழறி அதுக்குள்ள நீந்தி ஒருமாதிரி நீலக்கலர் சாறியை கண்டெடுத்தார். 

அந்தச்சாறியை நெஞ்சோட அணைச்சு எடுத்து வந்து அயின் பண்ணிக்கொண்டிருக்கும் போது;

"எதை அயின் பண்ணுறியள்? என்னைக்கேக்கத்தெரியாதே! உந்த நீலம் இல்லை. மற்ற நீலம். மயில் டிசைனில இருக்கு"

"ஏன் இதுக்கென்ன குறை?" சாமியாருக்கு ஆத்திரம் வந்தது.

"உந்த நீலம் போனமாதம் மோகன் அண்ணைவீட்டு பிறந்தநாளுக்கு கட்டினது. அது கூட நினைவில்லை. என்னைப்பாக்காமல் வாற ஆக்களின்ர வாயைப்பாத்தால் உப்பிடித்தான்!"

எந்த எந்த நிகழ்வுக்கு மனிசி என்ன கலர் சாறி கடினவள் எண்டதை 38 வயதிலயும் ஞாபகம் வைச்சிருக்கவேணும். இல்லையோ வீண் பிரச்சினைகள் வரும்.

"மோகண்ணையின் பிறந்தநாளுக்கு வந்த சனம் இங்க வராது. அதையே கட்டுமன். உனக்கு இந்த நீலம் வடிவா இருக்கும்"
ஆதினத்துக்கு என்ன கலர் சாறி கட்டினாலும் வடிவுதான்.அதை சாமியார் வெளிப்படையாக மனிசிக்கு சொல்வதில்லை.சொல்லோணும் நினைப்பார் அதுக்குள்ள ஏதேனும் கொழுவல் வந்திடும்.
உப்பிடித்தான் ஒரு நாள் சாமியார் வாய் தடுமாறி ஒருபேரைச்சொல்லி ;
"அவாவை விட நீ வடிவு " எண்டார்.

"அப்ப அந்த கலியாணவீட்டில் நீங்கள் என்னைப்பாக்குறதை விட்டிட்டு அவாவைத்தான் பாத்தனியளோ?" எண்ட குதர்க்கமான கேள்விக்கு சாமியார் என்ன பதிலைச்சொல்ல???

"இந்த நீலம் உன்ர கலருக்கு எடுப்பா இருக்கும்"!
சாமியார் அயின் பண்ணுற பஞ்சியில் கெஞ்சினார்.

"அந்த சாறியோட நிண்ட போட்டோவை பேஸ்புக்கில போட்டாச்சு. எல்லாரும் பாத்திருப்பினம். இனி அது கட்டேலாது"

வெளிக்கிட்டுப்போட்டு பூமரத்துக்கு முன்னால நிண்டு போட்டோ எடுங்கோ எண்டு அரிகண்டப்பிடிச்சு அதை பேஸ்புக்கில போடவேணும். அது பெண்களின் நவீன சம்பிரதாயங்களில் ஒண்டு.

போட்டோ எடுத்துப்போட்டு உடன காட்டவேணும். பிழையெண்டால் திருப்ப திருப்ப எடுக்கவேணும்.அதுக்கு புருசன்மாருக்கு நிறைய பொறுமை வேணும். கலியாண கட்டினால் அது தன்னால வரும். வராட்டிலும் வரப்பண்ணிப்போடுவாகள்!!!

"இஞ்ச ஒண்டில் பெடியை வெளிக்கிடுத்துங்கோ. அல்லது நான் வெளிக்கிடுகிறதுக்கு உதவி செய்யுங்கோ"

சாமியார் வெளிக்கிடுவதைப்பற்றி சமூகம் கவலைப்படுவது மாதிரி தெரியவில்லை. சுயநலம் பிடிச்ச சமூகம் எங்கட சமூகம்.

"குந்தியிருந்து பிளிற்சை வடிவா லைனா பிடிச்சு விடுங்கோ. சீமானுக்கு ஏன் குனிய ஏலாமல் இருக்கோ?"

என்னதான் வீரமா நெஞ்சை நிமித்தி மேடையில் பேசுற சீமானும் மனிசியின்ர காலடியில் குனிஞ்சு இருந்துதான் பிளிற்ஸ் பிடிக்கவேணும்.

"தப்புறதுக்கு வாய்ப்பில்லை ராசா!"

ஒரு மாதிரி கஸ்ரப்பட்டு பிளிற்சைப்பிடிச்சு ....அப்பாடா முடிஞ்சுது எண்டு எழும்பினால்;

அடுத்தது.....

"இஞ்சை இந்த நெக்கிளசை கொழுவி விடுங்கோ"

"இந்த தோட்டு சுரையை பூட்டி விடுங்கோ"

"இந்த பிளவுசின்ர நூலை வடிவா ஸ்ரைலா பின்னால கட்டி விடுங்கோ"

"இந்த தொங்கலை வடிவா ஊசியால குத்தி விடுங்கோ"

ஊசி குத்தும் போது சாமியாருக்கு கை நடுக்கத்தில் முதுகில் சாதுவா குத்திப்போட்டார்.

"எனக்கு தெரியும் வேணுமண்டுதான் குத்தினனியள்.போங்கோ போய் பேஸ்புக்கை நோண்டுங்கோ. நான் என்ர பாட்டில வெளிக்கிடுறன்"

எல்லாம் செய்து முடிச்சாப்பிறகு இந்த ஏச்சையும் கேட்டுக்கொண்டு பேசாமல் போகவேணும்.

திருப்பி கதைச்சியள் எண்டால் சீலையை உரிஞ்சு எறிஞ்சுபோடுங்கள்.

பிறகு கலியாணவீடும் இல்லை.பெடியளோட சேந்து தண்ணி அடிக்கவும் ஏலாது.பம்பல் அடிக்கவும் ஏலாது.

பொறுமை... பொறுமை முக்கியம் ஆண்களே!

ஆ...ஆ....ஆண் நெடில் !!!

"எனக்கு என்ன உடுப்பு?" சாமியார் குழந்தைபெடி போல கேட்டார்.

"நல்ல ஒரு வேட்டியும் சேட்டையும் போடுங்கோ. எனக்கு மச்சிங்கா போடுங்கோ"

"நீலச்சேட்டு ஒண்டுதானே கிடக்கு. போன முறை ஊருக்கு போகயுக்குள்ள வாங்கினது. அதையே போடுறது?"
சாமியார் தெளிவுபடுத்திக்கொண்டார்.

"ஏன் அதைப்போட்டால் என்ன? இளந்தாரி எண்ட நினைப்போ? ஆரைப்பாக்க வாறியள்?"

தாங்கள் மட்டும் ஒருக்கா போட்டதை பிறகு போடமாட்டினம். ஆனால் ஆம்பிளைகள் மட்டும் வருசக்கணக்கா போடவேணும்.

காலக்கொடுமை.

1000 சீமான் வந்தாலும் இந்த பொம்பிளைகள் திருந்த வாய்ப்பில்லை ராசா!!!

எல்லாம் முடிச்சு வெளிக்கிடும் போதுதான் பொடியன் கக்கா போவான்.

"இஞ்சை அவனை ஒருக்கா கழுவுங்கோ.என்ர சாறி நனைஞ்சிடும்"

கட்டின வேட்டியை அவுத்துப்போட்டு யட்டியோட நிப்பார் சாமியார்.
வேட்டி நனைஞ்சுபோடும்.

நப்பியோட நிக்கிற பொடியனை தூக்கி குண்டியை கழுவி திரும்பவும் அவனுக்கு உடுப்புகளை போட்டார் சாமியார்.

"இவ்வளவு நேரமும் வெளிக்கிடாமல் யட்டியோட என்னத்துக்கு அலையுறியள்?"

சாமியார் வேட்டி கட்டி முதல்ல வெளிக்கிட்டு நிண்டதை குறும்படம் போட்டா காட்டமுடியும்?

"காரை ஓடுங்கோ. வரயுக்குள்ள நான் தானே ஓடவேணும்!" 

ஏதோ சிறிலங்கன் பிளைட்டை ஓடுறமாதிரி ஒரு பில்டப்.

எல்லாம் முடிச்சு காரை கறாஜ்ஜுக்குள்ள இருந்து வெளியில எடுக்கும் போதுதான் ஞானம்பிறந்தமாதிரி ஒண்டு கேப்பினம்.

"என்வலப் இருக்கோ?"

"இல்லை போகயுக்குள்ள கடையில வாங்குவம்"

"இஞ்ச நான் வேட்டியோட நிக்கிறன். கடையுக்குள்ள போனால் வெள்ளைக்காரங்கள் நக்கலா பாப்பாங்கள். நீ இறங்கிப்போய் வாங்கி வாறியா" 

"என்னால இறங்கேலாது. சாறி மடிப்பு குலைஞ்சுபோடும். பிள்ளை அழுவான். நீங்கள் போங்கோ"

சாமியார் இறங்கி சுப்பர் மார்க்கெட்டில் உள்ள கடையுக்குள்ள போனால் கடையுக்குள்ள நிக்கிறவன் எல்லாரும் விநோதமாக பாப்பாங்கள்.

இருந்தாலும் சாமியார் மீசையை முறுக்கிக்கொண்டு ஒரு கையால ஒரு பக்கத்து வேட்டி தலைப்பை தூக்கிகொண்டு விசய் சேதுபதி மாதிரி நடந்து போய் 1$ இக்கு "என்வலப்" வாங்குற அழகே தனி!!!

அண்டைக்கு உப்பிடித்தான் சாமியார் கம்பீரமாக நடந்து போய் என்வலப் வாங்கிக்கொண்டு வந்து ;
கவுண்டரில் நிண்ட வெள்ளைக்காரியிட்ட நீட்டி காசைக்குடுத்து வாங்கிக்கொண்டு வெளிக்கிடும் போது;
சாமியாரைப்பாத்து சிரிச்சுப்போட்டு ஒண்டு சொன்னாள்.

சாமியாருக்கு சீ ... எண்டு போட்டுது.

விசய் சேதுபதி வேதாளத்தில் கம்பீரமாக வேட்டியோடு நடந்து வந்து சீரியசா பேசும் போது வேட்டி கழண்டு கீழ விழுந்தா எப்பிடி இருக்கும்.

அதுபோல எண்டு வையுங்கோவன்.

வெள்ளைக்காரி என்ன சொன்னவள் எண்டு கேளுங்கோவன்?

"Man i like your saree"

என்னதான் கலியாணம் கட்டின பொடியள் மீசையை முறுக்கி வேட்டியை கட்டினாலும் அது மனிசிமாரின் சீலை போலத்தான் இருக்கும் எண்ட "வாழ்க்கைத்தத்துவம்" வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்சிருக்கு.

#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியாரும் கொமுனிக்கேசன் சிஸ்ரமும்!

1998!
அந்த நேரம் ஊரில கைத்தொலைபேசிகள் இல்லை.5G உம் இல்லை.சம்சுங்கும் இல்லை. ஆனாலும் எங்கட தொழில்நுட்பங்கள் பனையின்ர வட்டை விட உயரமாகவே இருந்தன.

உதாரணத்துக்கு சனிக்கிழமைசாமியார் ரியூசனுக்கு "கட்" அடிச்சுப்போட்டு ஓராங்கட்டை சந்தியில உள்ள பிரியா தியேட்டரில் படம் பார்ப்பார். படம் முடிஞ்சு வெளியில வர வாசலில சாமியாரின் தேப்பன் பூவரசம் தடியோட நிப்பார்.
அப்பிடி ஒரு வேகமான "கொமுனிக்கேசன் சிஸ்ரம்" எங்கட ஊரில இருந்தது.

இன்னும் ஒரு உதாரணம் சொல்லுறன்.
சனிக்கிழமைசாமியார் A/L உயர்தரம் படிக்கும் போது சாமியாரின் நாலாவது ஆள் O/L படிச்சவா. சனிக்கிழமை சாமியாருக்கும் அவரின் நண்பனுக்கும் கொடுக்கப்பட்ட வேலை என்னண்டால்;

அந்த பிள்ளையை பத்திரமா வீட்டு படலையடியில இருந்து கூட்டிக்கொண்டே ரியூசன் வாசலில விடுவதும்;
பிறகு ரியூசன் முடிய அலுங்காமல் குலுங்காமல் திரும்பவும் அந்த பிள்ளையின் வீட்டு வாசலில கொண்டே விடுவது. இந்த வேலையை சாமியாரும் சாமியாரின் நண்பனும் ஒரு நாள்கூட "சிக் லீவு" எடுக்காமல் ஒரு வருசமாக செய்தார்கள்.

உப்பிடித்தான் ஒருநாள் சாமியாருக்கு உசுப்பேறி அந்தப்பிள்ளையை ஒரு ஒழுங்கையுக்குள்ள மடக்கி;
முடிவைக்கேட்டார்.
ஒழுங்கை தொங்கலில சனிக்கிழமை சாமியாரின் உயிர் நண்பன் காவல்.

"நான் அம்மாவைக்கேட்டுத்தான் முடிவு சொல்லுவன்" எண்டு அந்தப்பிள்ளை சொல்லி முடிச்சு தலைநிமிரமுதல் ;
ஒழுங்கை வாசலில அந்தப்பிள்ளையின் அம்மாவை ஏத்திக்கொண்டு மூத்தமச்சாள் வந்திட்டா.

மூத்தமச்சாள் எண்டு சொன்னது சனிக்கிழமை சாமியாரின் ஆளின்ர மூத்த அக்கா.அவாவுக்கு சனிக்கிழமைசாமியாரில் ஒரு விருப்பம் இருக்கு. விருப்பம் எண்டால் பிழையா விளங்கப்படாது.
தன்ர தங்கச்சியை சனிக்கிழமைசாமியார் போல ஒரு வடிவான பொடியனுக்கு கட்டிக்குடுக்க விருப்பம். அவ்வளவுதான்.

சுமார் 20 வருசம் கழிச்சு சனிக்கிழமைசாமியாரை முகநூலில் தேடிப்பிடிச்சு மூத்தமச்சாள் இந்த விசயத்தை சொன்னபோது சாமியார் உருகிப்போனார்.

சரி விசயத்துக்கு வருவம்.
சனிக்கிழமைசாமியாரின் ஆள் கொஞ்சம் வடிவான பெட்டை. பொதுவா வடிவான பெட்டை எண்டால் குறைஞ்சது நாலுபேரெண்டாலும் பின்னால சுத்துவாங்கள். சனிக்கிழமைசாமியார் தன் உயிர் நண்பனோடு அஞ்சாவதாகத்தான் சுத்துவார். ஆனால் சுத்தி முடிக்கும் போது முதலவதாக நிப்பார். அதுக்கு காரணம் சாமியாரின் ஆருயிர் நண்பன். சாமியாரை சைக்கிள் முன்னால இருத்தி நாய் மாதிரி மூசி மூசி ஓடுவான்.குச்சொழுங்கை, கிறவல், மண்றோட்டு , பள்ளம், திட்டி எண்டு பாராமல் அவன் ஓடிய ஓட்டம் தான் இண்டைக்கும் சாமியாரின் விடாமுயற்சிக்கு ஊன்றுகோல்.

பதிலுக்கு சாமியாரும் நண்பனுக்காக பருத்தித்துறையில் இருந்து தொண்டைமானாறு, கெருடாவில், உடுப்பிட்டி, கரணவாய்க்கு தேயத்தேய நண்பனை சைக்கிளில் ஏத்திக்கொண்டு ஓடியிருக்கிறார்.

சனிக்கிழமைசாமியார் ஒரு அசட்டுத்துணிச்சலில் பெட்டையை ஒழுங்கையுக்குள்ள மடக்கி முடிவை கேக்கும் நேரத்தில் ஆரோ ஒரு வில்லன் இந்த விசயத்தை வலு வேகமாக அந்தப்பிள்ளையின் வீட்டில சொல்லிப்போட்டான்.

பிற்காலத்தில் நடந்த பல காட்டிக்கொடுப்பு, துரோகம் போன்ற பெரிய குற்றச்செயல்களுக்கு இதுதான் ஆரம்பம் எண்டும் சொல்லலாம்.

SMS ஐ விட வேகமாக அந்தக்காலத்தில் செய்திகள் பரப்பப்பட்டுவிடும்.

மந்திகையில் இந்தியன் ஆமிக்காரன் றோந்தில வாறான் எண்டுறது 2 நிமிசத்தில  மெத்தைக்கடை சந்தியில் உள்ள இயக்கப்பொடியளுக்கு தெரிஞ்சிடும்.

கதையோட கதையா ஒழுங்கை வாசலில காதலுக்கு காவல்  நிண்ட சனிக்கிழமைசாமியாரின் நண்பனை மறந்திட்டம் பாருங்கோ!

ஒழுங்கை வாசலில சென்றியில காவலுக்கு நிண்ட நண்பனின் AK 74 ஐத்தாண்டி எப்பிடி மூத்தமச்சாளும் மாமியும் வந்தவை எண்டு சாமியார் குழம்பிட்டார்.

மாமி எண்டு சொன்னது சாமியாரின் ஆளின்ர அம்மா. காதலிச்ச பிள்ளையை கட்டுறமோ இல்லையோ சாகும்வரைக்கும் ஒரு சோட்டைக்கு மாமி, மாமா, மச்சான்,மச்சாள் என்ற உறவு முறைகளை சொல்லிக்கூப்பிடுவதில் ஒரு தனிச்சுகம்.

ஆமிக்காரன்ர றவுண்டப்பில் ஆப்பிட்ட ஆளைப்போல பதறிப்போய் தன் ஆருயிர் நண்பனைத்தேடினார் சாமியார்.

ஒழுங்கை வாசலில ஆள் இல்லை.

ஒரு மாதிரி மூத்தமச்சாள் பாவப்பட்டு சனிக்கிழமைசாமியாரை பிணை எடுத்து விட்டார். அண்டைக்கு மட்டும் மூத்தமச்சாள் வந்திருக்காவிட்டால் நிச்சயம் சனிக்கிழமைசாமியாரின் கன்னத்தில் மாமி குடுத்திருப்பா. அதாவது சனிக்கிழமை சாமியாருக்கு கன்னத்தில அடி விழுந்திருக்கும்.

அவமானத்தில் கூனிக்குறுகி ஒழுங்கை வாசலில் நிண்டு தன் நண்பனைத்தேடினார் சாமியார். ஒழுங்கை வாசலில் சைக்கிள் மல்லாக்காய் கிடந்தது. நண்பனைக்காணவில்லை!

ஒழுங்கையின் எதிர்ப்பக்கத்தில் உள்ள பனம் காணிக்குள் இருந்து வந்தான் நண்பன். வரும்போது தன்னுடைய காச்சட்டையின் "சிப்பை" சரிசெய்துகொண்டு வந்தான்.

"மச்சான் என்ன முடிஞ்சுதா? என்னவாம் ஆள். ஓமண்டுட்டாளோ?" 
நண்பனின் கேள்விக்கு சாமியாரின் பதில் என்ன பாசையில் இருந்திருக்கும் என்பதை உங்களின் ஊகத்துக்கே விடுவம்.

சனிக்கிழமைசாமியாரை ஏத்திக்கொண்டு சைக்கிள் பருத்தித்துறை றோட்டால் தும்பளைக்கு பயணமானது. அவ்வளவு நேரமும் ஒழுங்காய் ஓடின சைக்கிள் செயின் "கிறீச் கிறீச்" எண்டு சோக கீதம் இசைத்தது.

மாமி கேட்ட கேள்வி ஒண்டு சாமியாரின் இதயத்தில் சாக்கு தைக்கிற ஊசியால குத்தின மாதிரி ஒரு வலி!

வீட்டுக்குப்போன சாமியார் கிணத்தடியில போய் நிண்டு அள்ளி முழுகினார். முழுகும் போது அவமானத்திலும் தோல்வியிலும் சாமியரின் கண்ணில் இருந்து கண்ணீர்த்துளிகள் "லக்ஸ்" சோப்போடு கழுவுப்பட்டு போயின.

அம்மாவின் சோட்டியால் தலையை உணத்திப்போட்டு அப்பாவின் சாரத்தை கட்டினார் சாமியார். 
கொடியில் கிடந்த அண்ணாவின் சேட்டைப்போட்டுக்கொண்டு றேடியோவில் சோகப்பாட்டை போட்டு கேட்டபடி விறாந்தையில் இருந்தார் சாமியார்.

"அந்தப்பிள்ளையில எங்களுக்கும் விருப்பம் தான். ஆனால் அதுகளுக்கும் எங்களுக்கும் ஒத்துவராது. பேசாமல் துரையன் மாமாவின்ர அகிலாவைப்பார். அவளின்ர வடிவுக்கு ஒருத்தரும் கிட்ட நிக்காயினம்"

அம்மா குசினியுகுள்ள இருந்து புறுபுறுத்தது சாமியாரின் காதுகளுக்கு பனிகாலத்தில் புலிகளின் குரல் செய்திகள் கிளியராய் கேப்பது போல கேட்டது.

சம்பவம் நடந்து அரை மணித்தியாலத்துக்குள்ள சனிக்கிழமைசாமியாரின் அம்மாவின் காதில போடும் அளவுக்கு அந்த நேரம் எங்கட "கொமுனிக்கேசன் சிஸ்ரம்" வலு வேகமாத்தான் இருந்தது. உந்த 5G எல்லாம் அப்ப இல்லை எண்டதை நினைவில் வைச்சுக்கொள்ளுங்கோ!

சரி உதைவிடுவம். சனிக்கிழமை சாமியாரின் அம்மா சொன்ன துரையன் மாமாவின் மகளைத்தேடி சாமியார் போனாரா? இல்லையா? என்பதை அடுத்த கிழமை பாப்பம்.

#சனிக்கிழமைசாமியார்

சனிக்கிழமைசாமியாரும் "றாணி சோப்பும்"!

கிட்டத்தட்ட பத்து வருசத்துக்கு பிறகு "றாணி" சோப்பில ஒரு குளிப்பு!

ஊரில முந்தி கிணத்தடியில அள்ளி முழுகிப்போட்டு றாணி சோப்பை காகம் எடுக்காமல்;

கிணத்துவேலி கிடுகுக்குள்ள ஒழிச்சுவைப்பம்.

(ஆனால் இப்ப ஊரில காகங்கள் சோப்பை எடுப்பதில்லை. காகங்கள் இப்ப களவெடுப்பதில்லை)

பள்ளிக்கூடத்துக்கு "றாணி" சோப்பு குளிச்சுப்போட்டு வாற பெட்டைகளின்  வாசம் சும்மா  சுண்டி இழுக்கும்!

என்னதான் "சோப்பு" வந்தாலும் றாணி சோப்பு வாசம் ஒரு தனிரகம்!

அம்மாவாணை புழுகையில்லை. ஒருக்கா வாங்கி குளிச்சுப்பாருங்கோ. 

வெளிநாட்டில இருக்கிற எனக்கு ஊர்வாசம் வீடுமுழுக்க மணக்குறமாதிரி ஒரு "பீலிங்" ;-)

அதுகும் கிணத்தடியில் வாளியால அள்ளி குளிக்கிறது வேற லெவல் "சொர்க்கம்"!

கிணத்தடியும் வாளியும் பாக்க இன்னும் ஒரு வருசம் ஆகும் போல கிடக்கு.

அதனால " சோட்டைக்கு" இண்டைக்கு "றாணி சோப்" குளியல்!

#சனிக்கிழமைசாமியார்

♥️மெல்பேர்ண் எயாப்போட்டில் சனிக்கிழமைசாமியார்

சாமியாரின் நண்பன் ஒருத்தன் குடும்பத்தோட ஊருக்கு போயிருந்தான். திரும்பி வரும் போது அவனை ஏத்துவதற்காக போயிருந்தார்.

பின்னேரம் 3:30 இக்குத்தான் கொழும்பு - மெல்பேர்ண் சிறிலங்கா ஏயார்லைன்ஸ் வரும்.

சாமியார் கொஞ்சம் நேரத்தோட போய் arrival இடத்தில உள்ள கதிரையில் காவல் இருந்தார்.

பக்கத்தில இன்னும் கொஞ்ச எங்கட ஆக்கள் ஆளும்பேருமா வந்து இருந்தினம். சாமியார் ஒரு சிரிப்பை சிரிச்சுப்போட்டு போனை நோண்டத்தொடங்கினார்.

“மன்னார் புதைகுழி முடிவுகள் தமிழருக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். சுமந்திரனின் தீர்க்கதரிசனம் உண்மையானது”

“வரவு செலவு திட்டத்தை நிபந்தனையின்றி கூட்டமைப்பு ஆதரிக்கும்”

“திருமணமான 3 பிள்ளைகளின் தாயிடம் 60 லச்சத்தை பறிகொடுத்தார் ஜேர்மன் தமிழ் மைனர்”

இப்படி பல விநோதமான செய்திகள் முகப்புத்தகத்தில் உலாவின.

பக்கத்தில் இருந்த எங்கட ஆக்களின் ஆரவாரம் பெரிய ஆரவாரம்!

“போட்டோக்காரன் வந்திட்டானா?”
“ஒரு பூச்செண்டு காணுமோ இன்னும் ரண்டு வாங்கவோ மச்சான்?”
“மச்சான் நாலு காரும் ஒண்டாப்போவம். ஒருத்தனையும் இடையில பூர விடாத!”
“வீட்ட போனதும் ஆராத்தி ரெடி பண்ணவேணும்!”
“வாற சனி இரவு எயாப்போட்டுக்கு ஏத்த வந்த ஆக்களுக்கு பாட்டி”

இந்தக்கதைகள் சாமியாரின் இடக்காதுக்குள் பூந்து வலக்காதுக்குள்ளால போய்க்கொண்டிருந்தன.

சாமியாரின் புலன்விசாரணையின் அடிப்படையில் ஊரில இருந்து புதுசா “பொம்பிளை” இண்டைக்கு அவுஸ்திரேலியாவுக்கு வந்து இறங்கப்போகுது என்பது தெரிந்தது.

வந்திறங்கும் வாசலில் (departure gate) பூட்டப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு அருகில் ரண்டுபேர் போய் நிண்டு ஆள் வாறவோ எண்டு பாத்துக்கொண்டிருந்தார்கள்.

மாப்பிளைக்கு ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பு மேல் அழைப்பு.

“ஓம் மாமி பிளேன் இறங்கிட்டுது. சனம் வெளியில வந்துகொண்டிருக்குது. கறுத்த ஜக்கெட் தானே போட்டுக்கொண்டு வந்தவள். ஒரு பிரச்சினையும் இல்லை”

“10 கிலோ மிளகாய்த்தூளும் கருவாடும் குடுத்து விட்டவையாம். எப்பிடியும் நாய் மணந்து பிடிச்சிருக்கும். கொண்டுவந்த எல்லா சாமானும் கிழறித்தான் விடுவாங்கள். கொஞ்சம் லேட் ஆகும்”

மாப்பிளை பரபரப்பா அங்கும் இங்கும் ஓடித்திரிஞ்சார்.

அதுக்கிடையில் போட்டோக்காரன் வந்திட்டான். போட்டோக்காரன் சும்மா ஏன் நிப்பான் எண்டு அங்க நிண்ட சனத்தை போட்டோ எடுக்கத்தொடங்கினார். 

“அண்ணை காரில டக்கெண்டு ஏறிப்போகவேண்டாம். கொஞ்ச நேரம் காருக்கு பக்கத்தில நில்லுங்கோ. போட்டோ எடுத்திட்டு போவம்”
போட்டோக்காரன் “லொக்கேசன்” சொன்னான்.

மாப்பிளை புது மனிசியை ஏத்த புதுக்கார் வாங்கியிருக்கிறார்.எப்பிடியும் அந்த கார் லோன் கட்டி முடிய நாலு வருசம் ஆகலாம்.

“புதுமனிசியை புதுக்காரில தான் ஏத்தவேணும” எண்டு ;
கூட இருந்த பொடியள் உசுப்பேத்தி இருப்பாங்கள். அதைக்கேட்டு பொடியனும் லோனில கார் வாங்கியிருப்பான்.

“மாப்பிளை என்ர மோளை புதுக்காரிலதான் எயாப்போட்டில வந்து ஏத்தினவர்” எண்டு மாப்பிளையின் மாமா கோப்பிறேசனில் புளிச்ச கள்ளை குடிச்சபடி புழுகியிருப்பார் என்பது சாமியாரின் ஞானக்கண்ணுக்கு தெரிந்தது.

திடீரெண்டு ஒரு சின்னப்பிள்ளை துள்ளிக்குதிச்சு கத்தியது.
“அந்தா அன்ரி வாறா மாமா”

சனம் எல்லாம் எழும்பி வாற வாசலுக்கு ஓடியது.மாப்பிளையும் பின்னால ஓடினார்.

மாப்பிளை புது மனிசியை பாக்குற அந்தரத்தில வாங்கின பூச்செண்டை சாமியாரின் கதிரைக்கு கொஞ்சம் அங்கால மறந்து போய் வைச்சிட்டு ஓடினார்.

சாமியார் அந்தப்பூச்செண்டை எடுத்துக்கொண்டு அதை மாப்பிளையிடம் கொடுக்க பின்னால ஓடினார்.

அதுக்கிடையில் ஒரே ஆரவாரம்!!!

வந்த பிள்ளையை சுத்தி சனம். கைகுடுப்பதும் கட்டிப்பிடிச்சு கொஞ்சுவதுமாய் ஒரே களோபரமா கிடந்தது. மாப்பிளையை கிட்டயும் விடயில்லை. வந்த பிள்ளை பாவமாக பேந்தப்பேந்த முளிச்சுக்கொண்டு தன்ர புருசனை தேடுகிறது.

கோதாரிவிழுந்த கல் நெஞ்சக்கார சனம் புது மாப்பிளையை மனிசிக்கு கிட்ட விடுகுது இல்லை.

சாமியார் எப்பிடியும் பூச்செண்டை அந்த பொடியனிடம் குடுக்க முயற்சிசெய்தார். சனம் விட்டால்த்தானே!

“அண்ணை ... இடிக்காதையுங்கோ. நாங்கள் முதல் வந்தனாங்கள். போட்டோ எடுத்துட்டு விடுறம். பிறகு பூச்செண்டை குடுங்கோ”

ஒரு குண்டு மனிசி சாமியாரைப்பர்த்து கொஞ்சம் கோபத்தோடு சொன்னா.

அடப்பாவிகளா சும்மா வந்த சாமியாரை உங்கட கூட்டத்தோடு சேத்திட்டியளே!!!

போட்டோக்காரன் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தான். 

கடைசியா ஒருமாதிரி மாப்பிளையை பொம்பிளையோடு சேர விட்டிட்டாங்கள்.

பிள்ளை டக்கெண்டு பொடியனின் கையை இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு அவன்ர முகத்தை பார்த்தது.

“இந்த சனத்திட்ட இருந்து என்னை காப்பாத்தி கூட்டிக்கொண்டு போ” எண்டு அந்தப்பிள்ளை மனசுக்குள் நினைச்சது மாப்பிளைக்கு கேட்டுதோ இல்லையோ சாமியாருக்கு கேட்டது.

அவுஸ்திரேலியா எண்டு கனவோட வந்த பிள்ளைக்கு விமான நிலையத்தில் வைச்சே எங்கட சனம் செய்யுற அலப்பறைகள் அந்த பிள்ளைக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

“தனக்கு இவ்வளவு ஆக்கள் வெளிநாட்டில இருக்கினம்” எண்டு காட்ட ஒரு பந்தாவுக்கு மாப்பிளை செய்த ஒரு “செட்டப்” தான் இது!

“இஞ்சை எல்லாரும் கையை தூக்கி ரண்டு விரலை காட்டுங்கோ. பேஸ்புக் லைவ் போகுது” ஒருத்தன் கத்தினான்.

அவர்களோடு சேர்ந்து சாமியாரும் கையை தூக்கி விரலை காட்டினார். 

“கறுத்தசட்டை போட்ட அண்ணை ஒருவிரல் இல்லை. ரண்டு விரல்”

சத்தியமா சாமியாரின் காதுக்கு ரண்டு விரலை காட்டச்சொன்னது கேக்கவேயில்லை.என்னத்துக்கு ரண்டு விரலை தூக்கி காட்டவேணும் என்பதும் இண்டுவரை சாமியாருக்கு தெரியவே தெரியாது.

சனத்தை விலத்தி ஒருமாதிரி மாப்பிளை பொம்பிளையிடம் வந்து சேர்ந்தார் சாமியார்.

“தம்பி ... உங்கட பூச்செண்டை மறந்து....”
சாமியார் சொல்லிமுடிக்க முதல் போட்டோக்காரன் கத்தினான்.

“அண்ணை கிட்ட நில்லுங்கோ  பூச்செண்டை பிள்ளையிட்ட மெதுவா குடுங்கோ”

சாமியார் திகைச்சுப்போனார். 

சாமியாரையும் அந்த சனக்கூட்டத்தில் ஒராள் எண்டு போட்டோக்காரன் தப்பா நினைச்சிட்டான்.

சாமியார் வழியில்லாமல் பூச்செண்டை மாப்பிளையிடம் கொடுக்க...

“அண்ணை அவாட்ட குடுங்கோ” என்றார் மாப்பிளை.

சாமியார் பூச்செண்டை புதுசா வந்த பிள்ளையிடம் கொடுத்தார். அதுவரை நேரமும் பேந்தப்பேந்த முளிச்ச பிள்ளையின் முகத்தில் ஒரு “மலர்ச்சி”!!!

“அண்ணா நன்றி. நீங்கள் தானே சனிக்கிழமைசாமியார்” 

பிள்ளை சிரிச்சபடி சாமியாருக்கு நன்றி சொன்னது.

“இவரை முதலே உனக்கு தெரியுமா?”
மாப்பிளை ஆச்சரியத்தோடு பிள்ளையிடம் கேட்டார்.

“என்ர பேஸ்புக்கில இருக்கிறார்.நல்லா எழுதுவார்” எண்டது பிள்ளை.

“அண்ணை விலத்துங்கோ. அடுத்த ஆக்கள் வாங்கோ” மீண்டும் போட்டோக்காரன் கத்தத்தொடங்கினான்.

சாமியார் வந்த அலுவலை மறந்து இதுக்குள்ள செருகுப்பட்டு நிண்டதால ஊரில இருந்து வரும் நண்பனை மறந்துவிட்டார்.

ஏற்கனவே நண்பன் வந்து இந்த “கூத்துகளை” பாத்துக்கொண்டு நிண்டான்.

சாமியார் நண்பனிடம் ஓடிப்போய் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனின் பயணப்பொதிகளை வாங்கி தள்ளிக்கொண்டு நடந்தார்.

“மச்சான் நீ என்னை ஏத்த வந்தனியோ அல்லது அவைக்கு பூச்செண்டு குடுக்கவந்தனியோ? உண்மையை சொல்லு”
நண்பன் கேட்ட கேள்வியால் சாமியார் ஒருகணம் ஆடிப்போனார்.

“இல்லை மச்சான் சத்தியமா உன்னைத்தான்ரா ஏத்த வந்தனான். அது பெரிய கதை. போகேக்குள்ள காரில சொல்லுறன்” என்றார் சாமியார்.

கடைசியாய் ஒருமுறை சாமியார் திரும்பிப்பார்த்தார். ஆரவாரம் இன்னும் முடியவில்லை. கமெரா flash ஒளித்துக்கொண்டேயிருந்தது.

பாவம் “அந்தப்பிள்ளை”!!!!

#சனிக்கிழமைசாமியார்

Comments System

Recent Posts Widget

Facebook Badge